இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன. கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர்

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.



அஸிஷா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று (10)  இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி  சுமார் 220 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது இந்த நாட்டிலே இனங்களுக்கிடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.

தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் தலைக்குனிவுடன் வாழ்ந்து வருகின்றது. சொல்லொண்ணாக் கவலைகள்,  கஸ்டங்கள், பொருளாதார அழிவுகள், அவமானங்கள் தாங்கிக் கொள்ள முடியாதவை. அனுபவித்தவற்றை இன்று நினைத்தாலும் கண்களில் நீர் பெருகும்.

தீவிரவாதிகளாக, அடிப்படைவாதிகளாக, பயங்கரவாதிகளாக, முஸ்லிம்கள் பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார்கள்.


 நெருங்கியிருந்தவர்களும் ஓரமாகி தூரமாகிச் சென்றார்கள். ஆன்மீகவாதிகளையும் அரசியல்வாதிகளையும் அஹிம்சாவாதிகளையும் அப்பாவிகளையும் கூண்டில் அடைத்தார்கள். விசாரணை செய்தார்கள். விளக்கம் கேட்டார்கள். கொரோனாவைக் காரணம் காட்டி தமது வஞ்சத்தைத் தீர்க்க முஸ்லிம்களின் உடல்களை எரியூட்டினார்கள்.

இவர்கள் எங்களிடம் இரங்காததால் இறைவனிடம் நீதி கேட்டோம். இப்பொழுது நீதி மெல்ல மெல்ல வர முயற்சிக்கிறது. இவைன் மிகப் பெரியவன்.

இந்த வேளையில் எம்மீது சுமத்தப்பட்டுள்ள அநாவசிய அவமானக் குற்றச்சாட்டுக்களைக் களைந்தெறிந்து இந்த சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு நாம் தேசத்தின் நேச  பக்தர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

வடகிழக்கில் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடக்கம் பேரினவாத இனவெறுப்பு, ஈஸ்டர் தாக்குதல், சடலங்கள் எரிப்பு, என எல்லாவற்றிற்கும் சர்வதேச விசாரணை வேண்டும். அதற்காக இந்த சமூகம் அரசியலில் ஓரணியாகத் திரள வேண்டும்.” என்றார்.







இந்நிகழ்வுகளில் கொடை வள்ளலும் மார்க்க அறிஞரும் அரசியல்வாதியுமான காலஞ்சென்ற ஹஸன் மௌலவியின் ஞாபகார்த்த கருத்துரையும் இடம்பெற்றன.

கொடை வள்ளல் ஹஸன் மௌலவின் புதல்வன் அஸிஷா பௌண்டேஷனின் பணிப்பாளர் சாதிக் ஹஸன், சமூக செயற்பாட்டாளர் றிஸான் ஹாஜியார், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிநேசாதகர் சரூக்,  உட்பட ஜம்மிய்யத்துல் உலமா சபைக் கிளை உறுப்பினர்கள் மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களின் கதீப்மார் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

       ( ஏ.எச்.ஏ.ஹுஸைன்)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال