ஜனாஸாக்களை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கிண்ணியாவில் எதிர்ப்பு பேரணி(வீடியோ இணைப்பு)

 


(அப்துல்சலாம் யாசீம்)

ஜனாஸாக்களை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி கொட்டும் மழையில் கிண்ணியாவில் அமைதி எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.


கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மையவாடிக்கு அருகில் இன்று (27) எதிர்ப்பு பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாஸாக்களை எரிக்காதே,
அடக்கம் செய்ய அனுமதி!
எங்கள் உடல்களை எரித்து ஒரு வரலாற்று தவறுகளுக்கு ஆளாகாதீர்கள்!



 என்ற பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு பேரணியில்  ஈடுபட்டனர்.

இதேவேளை அமைதி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இம்மகஜரில் இலங்கை நாடு பல் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் கொண்ட நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட நாடாகும். இலங்கை முஸ்லிம்களும் இந்த நாட்டில் தமது மத சுதந்திரத்தை பூரணமாக பேணி பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து வருகின்றனர்.


 அண்மையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ்  தாக்கத்தின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரியூட்டும் நடவடிக்கை முஸ்லிம்களை மிகவும் பாதித்துள்ளது.

 இந்த நடவடிக்கையினை நிறுத்துவதற்கு தாங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

 துறைசார் நிபுணர் குழுவை மீளமைத்தல், மாற்றுக் கருத்தாளர்களின் கருத்தை தெரிவிக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும்.
சக இன மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை எமது நாடு பின்பற்றவேண்டும்.


 எமது நாடு சுபிட்சம் நிறைந்த நாடாக மிளிர வேண்டும் எனில் இறுதி கடமையைச் செய்யும் மக்களின் உரிமையை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் பொதுமக்களிடம் இதன்போது தெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال