யானை வேலியை நம்பியதால் பாதுகாப்பும் இல்லை பயிர்களும் இல்லை-விவசாயிகள் கவலை (வீடியோ இணைப்பு)

 


திருகோணமலை- கம்பகொட்ட மற்றும் சாந்திபுரம் பகுதிகளைச் சேர்ந்த  விவசாயிகள் யானை வேலியை நம்பியதால் பாதுகாப்பும் இல்லை பயிர்களும் இல்லை என கவலை தெரிவிக்கின்றனர்.


தங்களது விவசாய காணிகளை சுற்றி யானை மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும்  சிறந்த முறையில் கண்காணிக்கப் படாமல் இருப்பதால் யானைகள் இரவு நேரங்களில் வயல்களை சேதப் படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் யானை மீன் வேலிகளை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் யானைகள் பகல் நேரங்களில் கம்பகொட்ட  குளத்துக்குள் மறைந்திருந்து இரவு நேரங்களில் விவசாய காணிகளுக்குள் வருவதாகவும் அதேபோன்று கிராமத்துக்குள் புகுந்து வீடுகளில் இருக்கின்ற தென்னை மரங்கள் வாழை மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யானை மின் வேலிகள் அமைப்பதற்கு முன்னர் யானைகள் வயலுக்குள் வரும் என்ற பயத்தில்  வயல்களை சுற்றி குடிசைகள் அமைத்துக் கொண்டு காவலில் ஈடுபட்டு வந்தனர்.


 ஆனாலும் தற்போது யானை மின் வேலி அமைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதை நம்பி விவசாயிகள் இருந்தபோதிலும் மின்வேலி சிறந்த முறையில் கண்காணிக்கப்படாமல் இருப்பதால்  மின் வேலியில் மின்சாரம் சிறந்த முறையில் வராத காரணத்தினாலேயே யானைகள் உள்நுழைவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

விவசாய சங்கத்தின் ஊடாக ஒரு செய்கைக்கு 100 ரூபாய் வீதம்ஒரு விவசாயிடம் அறவிட்டு வருவதாகவும் இப்பணத்தை யானை மின்வேலியில் ஏற்படுகின்ற கோளாறுகள் மற்றும் அதனை சுற்றி சுத்தம் செய்வதற்கு வழங்கப்படுவதாகவும் விவசாய சங்கத்தின் செயலாளர் எச்.எம்.ஹகீம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் வயல்களை பாதுகாப்பதற்கு யானை மின் வேலிகளை பழுது பார்த்து அதனை உடனடியாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال